Last Updated : 01 Sep, 2021 11:15 AM

 

Published : 01 Sep 2021 11:15 AM
Last Updated : 01 Sep 2021 11:15 AM

இந்தியாவில் ஒரே நாளில் 1.33 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தி சாதனை: கரோனா தொற்றும் அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.33 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், கரோனா தொற்றும் அதிகரித்து 42 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 41 ஆயிரத்து 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 28 லட்சத்து 10 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 78 ஆயிரத்து 181 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கூடுதலாக 7,541 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் 1.15 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரத்து 644 பேர் குணமடைந்தனர், குணமடைந்தோர் சதவீதம் 97.51 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 524 பேர் கரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 460 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 39 ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 52 கோடியே 31 லட்சத்து 84 ஆயிரத்து 293 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16 லட்சத்து 6 ஆயிரத்து 785 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 65.41 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 1.33 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது இதுதான் முதல் முறையாகும்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x