Published : 30 Aug 2021 10:20 PM
Last Updated : 30 Aug 2021 10:20 PM

பாராலிம்பிக்ஸ் வீரர்களுக்கு ஹரியாணா அரசு பரிசு மழை: தங்க நாயகன் சுமித் அன்டிலுக்கு ரூ.6 கோடி ரொக்கப் பரிசு

பாராலிம்பிக்ஸ் வீரர்களுக்கு ஹரியாணா அரசு பரிசு மழை அறிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

இந்தப் போட்டியின் 7-வது நாளான இன்று, ஈட்டி எறிதலில் உலக சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார் சுமித் அன்டில். ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.இவர்கள் இருவரும் நாட்டுக்கும் அவர்கள் சார்ந்த ஹரியாணா மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் சுமித் அன்டிலுக்கு ரூ.6 கோடி ரொக்கப் பரிசும், வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு ரூ.4 கோடி ரொக்கப் பரிசும் அறிவித்துள்ளது ஹரியாணா மாநில அரசு.

மேலும் சுமித் அன்டிலுக்கும், யோகேஷுக்கும் அரசு வேலையும் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு 2வது தங்கம்:

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வெறுள்ளார். மேலும் 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளி வென்றார். பங்கேற்ற முதல் பாராலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தி உள்ளார் யோகேஷ் கதுனியா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x