Last Updated : 30 Aug, 2021 04:43 PM

 

Published : 30 Aug 2021 04:43 PM
Last Updated : 30 Aug 2021 04:43 PM

டெல்லியில் கரோனாவுக்குப் பின் திறக்க தயாராகும் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி வகுப்புகள்

டெல்லியில் ஒன்றரை வருடங்களாக கரோனாவால் யுபிஎஸ்சி தேர்வின் பயிற்சி வகுப்புகள் மூடிக் கிடக்கின்றன. பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த இவை விரைவில் மீண்டும் திறக்கத் தயாராகி வருகின்றன.

தலைநகரான டெல்லியின் முகர்ஜிநகர், ஷாலிமார்பாக், கரோல்பாக், உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் யுபிஎஸ்சி தேர்விற்கானப் பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இவற்றில், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, உத்தராகண்ட் உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவர்கள் பயில்கின்றனர்.

தமிழகத்திலிருந்தும் மாணவர்கள் இப்பயிற்சி நிலையங்களில் பயில டெல்லி வந்து தங்குகின்றனர். ஒவ்வொரு வருடமும் இவற்றில் சுமார் ஆயிரம் மாணவர்கள் புதிதாக வந்து சேர்கின்றனர்.

டெல்லி பல்கலைகழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 300 பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன. அனைத்தும் சேர்த்து அவைகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் எனக் கருதப்படுகிறது.

கடந்த வருடம் கரோனா பரவலினால் இவை அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு சுமார் ஒன்றரை வருடங்களாக ஒன்றுகூடத் திறக்கப்படவில்லை.

இதனால், அதில் பயின்ற மாணவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டனர். இவர்களில் சிலருக்கு இணையதளம் வாயிலாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இவர்களில் சில பயிற்சி நிலையங்கள் அருகிலுள்ள மாநிலங்களுக்கு மாறிக் கொண்டனர். அங்கு கரோனா ஊரடங்கு தளர்வுகள் இருந்தது அதன் காரணம்.

டெல்லியில் கரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. இதனால், அங்கு ஊரடங்கு பெரும்பாலுமாகத் தளர்த்தப்பட்டு பள்ளிகளும் செயல்படத் துவங்கி உள்ளன.

இச்சூழலில், டெல்லியில் பயிற்சி நிலையங்களையும் திறக்க அனுமதிக்க முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது. இதனால், அப்பயிற்சி நிலையங்கள் சுத்தமாக்கப்பட்டு வருகின்றன.

இத்துடன், அப்பயிற்சி நிலையங்களை நம்பியுள்ள நூல் நிலையங்கள், உணவு விடுதிகள், மாணவர்கள் தங்கும் அடுக்கு மாடி வீடுகள் ஆகியவையும் செப்பனிடப்பட்டு தயாராகி வருகின்றன.

இவை அனைத்தும் மூடப்பட்டதால் அவர்களுக்கு பல கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இதனுடன் பயிற்சி நிலையங்களும் சேர்த்து வருடம் ரூ.100 கோடி அளவில் மாணவர்கள் செலவிடுகின்றனர்.

இதை மீட்டெடுக்க டெல்லி அரசும் அப்பயிற்சி நிலையங்களுக்கு வரி உள்ளிட்ட சில சலூகைகள் அளிக்கத் திட்டமிடுகிறது. இதில் மீண்டும் வரும் 18 வயதிற்கும் அதிகமான மாணவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்துவது உள்ளிட்ட சில நிபந்தனைகள் இடப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x