Published : 29 Aug 2021 04:59 PM
Last Updated : 29 Aug 2021 04:59 PM

பாராலிம்பிக் வெற்றி நாயகி பவினாபென்னுக்கு ரூ.3 கோடி ஊக்கத் தொகை: குஜராத் அரசு அறிவிப்பு

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இறுதிச் சுற்றில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ள பவினாபென் படேலுக்கு ரூ.3 கோடி ஊக்கத் தொகை அறிவித்துள்ளது குஜராத் அரசு.

முன்னதாக இன்று, ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸில் தங்கப் பதக்கத்துக்கான இறுதிச் சுற்றில் பவினாபென் படேல், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் யிங் ஜாவுடன் மோதினார். ஆரம்பம் முதலே சீன வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினார். இதனால், பவினா தனது உத்திகளை செயல்படுத்த முடியாமல் திணறினார். இருப்பினும் அவர் தளர்வடையாமல் தனது முயற்சியைத் தொடர்ந்தார். 7-11, 5-11, 6-11 என்ற செட் கணக்கில் அவர் சீன வீராங்கனையிடம் தோல்வியுற்றார். இருப்பினும் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் பவினாபென் படேல்.

இந்நிலையில் அவருக்கு ரூ.3 கோடி ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. திவ்யங் கேல் பிரதீபா ப்ரோத்சஹான் புரஸ்கார் ஜோயனா 'Divyang Khel Pratibha Protsahan Puraskar Yojana' திட்டத்தின் கீழ் அவருக்கு இந்த ஊக்கத் தொகையை குஜராத் அரசு அறிவித்துள்ளது. முதல்வர் விஜய் ரூபானி, தனது வாழ்த்துச் செய்தியில், "குஜராத் மாநிலம் மேஷனா மாவட்டத்தின் மகள் தேசத்துக்கும் குஜராத்துக்கும் பெருமிதம் சேர்த்துள்ளார்" என்று பாராட்டினார்.

தனது வெற்றி குறித்து பவினாபென் படேல் கூறுகையில், ''இந்தப் பதக்கத்தை நான் என் தேசத்துக்கு அர்ப்பணிக்கிறேன். எனக்கு தொடர்ச்சியாக உறுதுணையாக இருந்த எனது பெற்றோர், பயிற்றுநர் மற்றும் நண்பர்களுக்கு நான் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x