

சர்வதேச அளவில் அதிக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ள நகரங்களின் பட்டியலில் இந்திய தலைநகர் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. தமிழக தலைநகர் சென்னை 3-ம் இடம் பெற்றுள்ளது.
உலகில் அதிகம் கண்காணிக் கப்படும் நகரங்களின் பட்டியலை‘போர்ப்ஸ் இந்தியா' இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சர்வதேச அளவில் அதிக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பெருநகரங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் இந்திய தலைநகர் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. டெல்லியில் ஒரு சதுர மைல் பரப்பளவில் 1,826.6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் தலைநகர் லண்டன் 2-ம் இடத்தைப் பெற்றுள்ளது. அந்த நகரில்ஒரு சதுர மைல் பரப்பில் 1,138.5சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. தமிழக தலைநகர் சென்னை 3-வது இடத்தில் உள்ளது. சென்னையில் ஒரு சதுர மைல் பரப்பில் 609.9 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சீனாவின் வக்சி, ஷென்ஷென், சிங்டாங், ஷாங்காய் நகரங்கள் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. சிங்கப்பூர் 8-வது இடத்தில் உள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ 13-வது இடத்திலும் அமெரிக்காவின் நியூயார்க் 14-வது இடத்திலும், சீன தலைநகர் பெய்ஜிங் 15-வதுஇடத்திலும் உள்ளன. இந்தியாவின் மும்பை நகரம் 18-வது இடத்தைப் பெற்றிருக்கிறது.