Published : 27 Aug 2021 03:11 AM
Last Updated : 27 Aug 2021 03:11 AM
பெங்களூருவில் எலஹங்கா நியூ டவுனை சேர்ந்தவர் ராதிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 36 வயதான இவர் தகவல் தொழில் நுட்ப நிறுவன மேலாளராக பணியாற்றுகிறார். சத்தீஸ்கரை சேர்ந்த மனீஷ்குமார் என்ற தனியார் நிறுவன ஊழியர் மீது எலஹங்கா காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ராதிகா அளித்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
மனீஷ்குமார் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானார். அவர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்த போது, நான் மறுத்துவிட்டேன். அவரை நான் பிளாக் செய்த பின்னர், எனது ஃபேஸ்புக் நண்பர்களுக்கு ஆட்சேபத்துக்குரிய வகையில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். எனது செல்போனை வேவு பார்த்து, அதில் உள்ள தொடர்பு எண்களுக்கு என்னைப் பற்றி குறுந்தகவல் அனுப்பி வருகிறார்.
கடந்த ஒரு மாதமாக நான் வீட்டில் இருக்கிறேனா அல்லது அலுவலகத்தில் இருக்கிறேனா என்பதை கண்டறிந்து தினமும் எனது பெயரில் 5 பீட்சா வரை ஆர்டர் செய்து, தொல்லை கொடுக்கிறார். கேஷ் ஆன் டெலிவரி முறையில் பீட்சா ஆர்டர் செய்யப்படுவதால் எனக்கு பண விரயம் ஆகிறது. இவ்வாறு ராதிகா புகார் கூறியுள்ளார்.
இப்புகார் தொடர்பாக மனீஷ்குமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, விசாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT