திருமணக் கோலத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுத வந்த மாற்றுத்திறனாளி: கேரளாவில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்

திருமணக் கோலத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுத வந்த மாற்றுத்திறனாளி: கேரளாவில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்
Updated on
1 min read

கேரளாவில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் திருமணக் கோலத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதவந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் ஜிஜி மோல். இவருக்கும் சுனில்குமார் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு ஜிஜி மோல் திருமண உடையுடனேயே பரீட்சை எழுதவந்தார்.

10 ஆம் வகுப்புக்கு நிகரான சான்றிதழுக்கான தேர்வை எழுத வந்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

இன்று எனக்குத் திருமணம் நடந்தது. வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருக்க வேண்டும் என்பது எனது கனவு. ஆனால், நான் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். 10 ஆம் வகுப்பு வரைகூட படிக்கவில்லை என்பது எனது கனவுக்கு முட்டுக்கட்டை போட்டது. அதனால், 10 ஆம் வகுப்புக்கு நிகரான சான்றிதழுக்கான தேர்வை எழுத விண்ணப்பித்தேன். அந்தத் தேர்வு எனது திருமண நாளிலேயே வந்துவிட்டது. தேர்வைத் தவறவிட எனக்கு விருப்பமில்லை. அதனால் தான் மனக்கோலத்துடனேயே தேர்வு எழுத வந்துவிட்டேன். அனைவரும் கல்வி கற்பது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளியான ஜிஜி மோல், இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் நிச்சயம் அவருக்கு வேலை கிடைக்கக் கூடுதல் வாய்ப்புள்ளது.

மணக்கோலத்தில் தேர்வு எழுதவந்த ஜிஜி மோலை, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் கேஜி.ராஜேஸ்வரி மற்றும் துணைத் தலைவர் பிபின் சி பாபு ஆகியோர் வரவேற்றனர். திருமண நாளில் ஜிஜி எழுதியத் தேர்வு இயற்பியல் பாடத்துக்கானது. இன்னும் 4 தேர்வுகளை அவர் எழுத வேண்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in