Published : 24 Aug 2021 03:13 AM
Last Updated : 24 Aug 2021 03:13 AM

ஆப்கனில் இந்தியர்களை மீட்ட பிரதமருக்கு கேரள முதல்வர் நன்றி

ஆப்கானிஸ்தானில் இருந்து கேரள மாநிலத்தவர் உள்ளிட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதை தொடந்து அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அமெரிக்கா, கத்தார், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இணைந்து இந்தியா மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 400 பேர் காபூலில் இருந்து மீட்கப்பட்டு 3 விமானங்களில் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஆப்கானிஸ்தானில் இருந்து கேரள மாநிலத்தவர் உள்ளிட்ட இந்தியர்களை மீட்பதில் வெளியுறவு அமைச்சகமும் பிரதமர் அலுவலகமும் மேற்கொண்ட முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வரும் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரதமருக்கு நன்றி. ஆப்கனில் உதவி தேவைப்படும் கேரள மாநிலத்தவர்கள், கேரள அரசின் வெளிநாடுவாழ் கேரள மக்கள் விவகாரத்துறை அல்லது மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் 24 மணிநேர சிறப்பு ஆப்கன் பிரிவை தொடர்பு கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x