Published : 23 Aug 2021 02:20 PM
Last Updated : 23 Aug 2021 02:20 PM

‘‘சாதிவாரி கணக்கெடுப்பு; பிரதமர் மோடி சரியான  முடிவை எடுப்பார்’’- சந்திப்புக்கு பின் நிதிஷ்குமார் பேட்டி

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி விவரங்களை சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி சரியான முடிவை எடுப்பார் என நம்புகிறோம் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறினார்.

நாட்டில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அப்போது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் கோரி வருகின்றன. இதனிடையே, மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மக்களைத் தவிர வேறு பிரிவு மக்களைச் சாதிவாரியாகக் கணக்கிடக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அண்மையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பிஹாரின் எதிர்கட்சியான ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கருத்து கூறியுள்ளார்.

லாலுவின் அரசியல் எதிரியும், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளவருமான பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து பிஹார் அனைத்துக் கட்சிக்குழு இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தது.

ஆர்ஜேடி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், பாஜகவின் ஜனக் ராம், காங்கிரஸ் நிர்வாகி அஜீத் சர்மா, முன்னாள் முதல்வர் மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் தலைவர் ஜித்தன் ராம் மாஞ்சி மற்றும் இடது கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர். நாடுமுழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பிறகு நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிஹார் மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் மக்களின் ஒரே விருப்பம் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான். மக்கள் இந்த விஷயத்தில் ஒரே கருத்தை கொண்டுள்ளனர். நாங்கள் கூறியதை பிரதமர் கூர்ந்து கேட்டார். அதற்காக அவருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி சரியான முடிவை எடுப்பார் என நம்புகிறோம். இதனை அவரிடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x