Published : 23 Aug 2021 03:12 AM
Last Updated : 23 Aug 2021 03:12 AM

புதிய ஐடி இணையத்தில் நீடிக்கும் பிரச்சினை- இன்போசிஸ் சிஇஓ-வுக்கு மத்திய நிதியமைச்சகம் சம்மன்

புதுடெல்லி

வருமான வரித் துறையின் (ஐடி) புதிய இணையதள செயல்பாட்டில் நிலவும் குறைகள் சரி செய்யப்படாதது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் அளிக்குமாறு இன்போசிஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக்குக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருமான வரித் துறை, ரிட்டர்ன்தாக்கல் செய்வதை எளிமைப்படுத்த கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு புதிய இணையதள வசதியை உருவாக்கியது. இந்த இணையதளத்தை உருவாக்கி அதை நிர்வகிக்கும் பொறுப்பு இன்போசிஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது.

புதிய இணையதளத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்வது சிரமமாக உள்ள தாகவும் இணையதளத்தினுள் நுழைவதே பிரச்சினையாக இருப் பதாகவும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. சிறு சிறு தொழில்நுட்ப பிரச்சினைகள் விரைவில் சரி செய்யப்படும் என நிதி அமைச்சரும் செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் கூறி வந்தார். நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் இப்பிரச்சினை இரண்டொரு நாளில் சரி செய்யப்பட்டுவிடும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இரண்டரை மாதம்ஆகியும் இப்பிரச்சினை தீர்க்கப்படாதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, இன்போசிஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை திங்கள்கிழமை (இன்று) சந்தித்து விளக்கம் அளிப்பார் எனத் தெரிகிறது.

ஆகஸ்ட் 21-ம் தேதி வரையிலும் வருமான வரித் துறை இணையதளத்தில் பிரச்சினை தொடர்கிறது என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவரத்தை ட்விட்டர் பதிவில் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x