Published : 23 Aug 2021 03:13 AM
Last Updated : 23 Aug 2021 03:13 AM

ஒருமுறை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிஹார் முதல்வர் நிதீஷ் வலியுறுத்தல்

பாட்னா: நாட்டில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அப்போது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் கோரி வருகின்றன. இதனிடையே, மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மக்களைத் தவிர வேறு பிரிவு மக்களைச் ஜாதிவாரியாகக் கணக்கிடக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அண்மையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் நேற்று கூறியதாவது:

ஜாதிவாரியான கணக்கெடுப்பு என்பது நாட்டில் ஒரு மிக முக்கியமான பிரச்சினையாகும். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நாளை (ஆகஸ்ட் 23) நான் சந்தித்துப் பேசவுள்ளேன். பிரதமருடனான சந்திப்புக்காக ஏற்கெனவே பல தலைவர்கள் டெல்லிக்குச் சென்றுவிட்டனர். என்னுடன் சிலர் நாளை வருகின்றனர். இந்த விஷயம் பிஹார் மாநிலத்துக்கு மட்டுமல்ல. நாட்டு மக்கள் அனைவருக்குமே நன்மை பயக்கக்கூடியதாகும். ஒருமுறையாவது இதை நடத்தவேண்டும் என்றுதான் நான் கோரிக்கை விடுக்கிறேன்.

ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவதா அல்லது வேண்டாமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும். நமது கோரிக்கைகளை மத்திய அரசு முன்பு வைப்பது நமது வேலையாகும்.

இவ்வாறு நிதீஷ் குமார் கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x