ஐஎஸ் தீவிரவாதம்: தேசிய விசாரணை ஆணையத்தால் 20-வது சந்தேக நபர் கைது

ஐஎஸ் தீவிரவாதம்: தேசிய விசாரணை ஆணையத்தால் 20-வது சந்தேக நபர் கைது
Updated on
1 min read

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தில் அப்துஸ் சமி குவாஸ்மி என்பவரை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய விசாரணை ஆணையம் கைது செய்துள்ளது.

ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக உரத்தக் குரலில் இவர் பேசி வருவதாகவும், பிறரைத் தூண்டும் விதமாகவும் அவர் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அப்துஸ் சமி குவாஸ்மி என்ற இந்த நபர் வடகிழக்கு டெல்லியில் சீலாம்பூரில் வசித்து வருபவர். இப்பகுதி முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அவர் தான் நடத்தி வரும் வலைத்தளத்தில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவான பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

இவர் மீது ஜாமீன் இல்லாத கைது வாரண்டு பிறப்பிக்கபப்ட்டதையடுத்து அவரை இன்று தேசிய விசாரணை ஆணையம் கைது செய்தது.

இவர், நாடு முழுதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று இளைஞர்களை தேச விரோதச் செயல்களுக்குத் தூண்டினார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவர் அறக்கட்டளை ஒன்றையும், மதரசாக்களையும் நடத்தி வருகிறார். இந்த நடவடிக்கைகள் மீதும் சந்தேகம் கிளம்பியுள்ளதால் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இவருடன் சேர்த்து என்.ஐ.ஏ இதுவரை 20 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in