Published : 22 Aug 2021 02:47 PM
Last Updated : 22 Aug 2021 02:47 PM

அடுத்தடுத்து பறந்த விமானங்கள்; காபூலில் சிக்கி தவித்த 329 இந்தியர்கள் ஒரே நாளில் மீட்பு

காபூலில் சிக்கி தவித்த 329 இந்தியர்கள் இன்று ஒரே நாளில் மூன்று விமானங்களில் மீட்கப்பட்டுள்ளனர். தஜிஸ்கிஸ்தான் மற்றும் தோஹா வழியாக அடுத்தடுத்து விமானங்கள் இயக்ககப்பட்டு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைபற்றியுள்ளனர். ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அங்குள்ள இந்தியா அழைத்து வர தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் சி17 விமானம் நேற்று முன்தினம் இரவு கொண்டு செல்லப்பட்டது. இந்திய விமானப்படை விமானம் மூலம் காபூலில் இருந்து நேற்று காலை 85 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

அடுத்த விமானம் தஜிகிஸ்தானில் இருந்து காபூல் நோக்கி செல்ல தயாராக இருந்தது. இந்த நேரத்தில் காபூலில் விமான நிலையத்திற்கு வெளியே குழப்பம் நிலவுவதாகவும், அதிகமான இந்தியர்களை விமான நிலையத்திற்குள் அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்தியர்கள் காபூல் விமான நிலையம் வந்ததை அறிந்து கொண்ட தலிபான்கள் விமான நிலையத்தின் வெளிப்பகுதியை சுற்றி வளைத்தனர். விமான நிலையம் அமெரிக்கப்படைகள் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் வெளியில் கூடிய மக்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.

இந்தியா விமானத்தில் ஏறுவதற்காக வெளியே வந்து சேர்ந்த 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து காபூல் விமான நிலையத்திற்கு வெளியே திரண்ட இந்தியர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியர்களை மீட்க தலிபான்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. மேலும் இந்தியர்கள் விடுவிக்கப்பட்டால் உடனடியாக அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் இன்று காலை 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது,

விமானம் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் காலை 10.15 மணியளவில் தரையிறங்கியது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து விமானங்கள் காபூலில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்தன. ஏர் இந்தியா விமானத்தில் 87 இந்தியர்கள், நேபாளத்தை சேர்ந்த 2 பேர் ஆக மொத்தம் 89 பேர் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அந்த விமானம் தஜிகிஸ்தான் வழியாக பயணித்து டெல்லிக்கு இன்று அதிகாலை வந்தடைந்தது.

மற்றொரு விமானம் இன்டிகோ மூலம் 135 இந்தியர்கள் கத்தார் தலைநகர் தோகா வழியாக அழைத்து வரப்பட்டனர். இந்த விமானமும் இன்று அதிகாலை டெல்லியில் தரை இறங்கியது. ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டன. மொத்தமாக இன்று ஒரே நாளில் 329 இந்தியர்கள் மூன்று விமானங்களில் மீட்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x