Published : 22 Aug 2021 01:27 PM
Last Updated : 22 Aug 2021 01:27 PM

‘‘அவரது கனவுகள் நிறைவேறும்’’- கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி  நேரில் அஞ்சலி

மறைந்த முன்னாள் உ.பி. முதல்வர் கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் மறைந்தார். அவருக்கு வயது 89. கடந்த ஜூலை மாதம் அவருக்கு உடல்நிலைக் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு, இதயக்கோளாறு, நரம்பியல் பிரச்சினை இருந்தது. இதனால் அவருக்கு பல்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். செப்சிஸ் மற்றும் பல்வேறு உள் உறுப்பு செயலிழப்பால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கல்யாண்சிங் உடல் அஞ்சலிக்காக லக்னோவில் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று காலை நேரில் சென்று கல்யாண் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி டெல்லியில் இருந்து அஞ்சலி செலுத்துவதற்காக லக்னோ வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், யோகி ஆதித்யநாத், பாஜகவினர் வரவேற்றனர்.

பின்னர், பிரதமர் மோடி கல்யாண் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:

‘‘திறமையான ஒரு தலைவரை இழந்துவிட்டோம். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது. அவருடைய எண்ணங்கள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்ற பாஜகவினர் முயல வேண்டும். அவருடைய கனவுகள் நிச்சயமாக நிறைவேறும்’’ என்றார்.

கல்யாண் சிங்கின் மகனும், பாஜக எம்.பி.யுமான ராஜ்வீர் சிங் தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது மயங்கி விழுந்தார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x