Last Updated : 12 Feb, 2016 09:19 AM

 

Published : 12 Feb 2016 09:19 AM
Last Updated : 12 Feb 2016 09:19 AM

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி மீது பெண் நீதிபதி கூறிய பாலியல் புகாரை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம்: மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அறிவிப்பு

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதி மன்ற நீதிபதி மீது, பெண் நீதிபதி கூறியுள்ள பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த, உச்ச நீதிமன்ற நீதிபதியை மாநிலங்களவைத் தலைவர் நியமித்துள்ளார்.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கங்கலே. இவர் மீது பெண் நீதிபதி ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். மேலும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதி கங்கலேவுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டன தீர்மானம் கொண்டுவருமாறு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த 58 எம்.பி.க்கள் கண்டனம் தீர்மானம் கொண்டுவர மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரியிடம் நோட்டீஸ் வழங்கினர். அந்த நோட்டீஸில், “குவாலியர் மாவட்ட நீதிமன்ற பெண் நீதிபதிக்கு கங்கலே பாலியல் தொல்லை கொடுத்தது, ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவருக்கு பாதிப்பு ஏற்படுத்தியது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்தப் பெண் நீதிபதியை சித்திக்குக்குபணியிடமாற்றம் செய்தது ஆகிய 3 குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

எம்.பி.க்களின் நோட்டீஸை ஏற்றுக் கொண்ட அன்சாரி, உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சிங் தலைமையில் விசாரணைக் குழுவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமித்தார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி உச்ச நீதிமன்ற பணியில் இருந்து நீதிபதி விக்ரம்ஜித் ஓய்வு பெற்றார். எனினும், நீதிபதிகள் விசாரணை சட்டம் 1968-ன்படி அவர் ஓய்வு பெற்றாலும், விசாரணை குழுவின் தலைவராக நீடிக்கலாம் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கருத்து தெரிவித்திருந்தார். எனினும், மாநிலங்களவைத் தலைவரின் முடிவுக்கு விட்டுவிட்டார்.

இந்நிலையில், ம.பி. நீதிபதி கங்கலே மீதான புகாரை விசாரிக்கும் விசாரணை குழுவை, மாநிலங்களவை தலைவர் அன்சாரி மாற்றி அமைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இதுகுறித்து மாநிலங்களவை வெளியிட்ட அறிக்கையில், “விசாரணைக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார். தவிர நீதிபதி மஞ்சுளா செல்லூர் (கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி), கே.கே.வேணுகோபால் (உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்) ஆகியோர் ஏற்கெனவே விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீதிபதி சென் ஓய்வு பெற்றுவிட்டதால் அவரை மாற்ற வேண்டும் என்று சட்டத் துறை அமைச்சகம் மற்றும் அரசியல் கட்சியினர் கூறியிருந்தனர்.

இதற்கிடையில் தன் மீதான பாலியல் புகாரை நீதிபதி கங்கலே மறுத்துள்ளார். புகாரை நிரூபித் தால் தூக்கு தண்டனையை ஏற்க வும் தயார் என்று அவர் கூறியிருந் தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x