Published : 21 Aug 2021 07:00 AM
Last Updated : 21 Aug 2021 07:00 AM
கர்நாடக மாநிலம் பெலகாவி மத்திய சிறையில் ரூ.500 செலுத்தினால், சிறைக் கைதியை போல ஒரு நாள் உள்ளே இருக்கலாம் என புதுமையான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பெலகாவி இண்டல்கா மத்திய சிறைச்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
1923-ம் ஆண்டு கட்டப்பட்ட பெலகாவி இண்டல்கா மத்தியசிறை கர்நாடகாவின் பழமையானசிறைகளில் ஒன்றாகும். சுதந்திரப்போராட்ட காலத்தில் தொடங்கிதற்போது வரை முக்கியப் பிரமுகர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். இந்த பழமையான சிறையை பார்வையிட அனுமதி கோரி நாள்தோறும் ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன.
அதனை கருத்தில் கொண்டு ‘சிறையில் ஒரு நாள்’ என்ற சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்த சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
அதன்படி பொதுமக்கள் ரூ. 500செலுத்தினால் பெலகாவி சிறையில் 24 மணி நேரம் கைதியை போல வாழலாம். உள்ளே வருபவர்களுக்கு கைதி எண், கைதிக்கான சீருடை, சிறை அறை எண் உள்ளிட்டவை வழங்கப்படும்.
காலை 5 மணிக்கு தேநீர்,6.30 மணிக்கு காலை சிற்றுண்டி,11 மணிக்கு பகல் உணவு, மாலை 7 மணிக்கு இரவு உணவுவழங்கப்படும். கைதிகளைப் போலவே சுற்றுலாப் பயணி களுக்கும் தோட்டத்தொழில், சமைத்தல், தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகள் அளிக்கப்படும். வார இறுதி நாட்களில் சிறைக்கு வருவோருக்கு கைதிகளுக்கு வழங்கப்படும் இறைச்சி உணவு பரிமாறப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் சிறையில் தங்கி, கைதிகள் அனுபவிக்கும் கஷ்டங்களை கண்டால், அவர்களுக்கு குற்றம் செய்யும் எண்ணம் தோன்றாது. சமூகத்தில் விழிப்புணர்வு, அமைதி உருவாகும் என்பதாலும் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT