Published : 20 Aug 2021 03:40 PM
Last Updated : 20 Aug 2021 03:40 PM

‘‘ஆப்கன் செல்லுங்கள்; குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கும்’’- பாஜக நிர்வாகி பேச்சால் சர்ச்சை

குறைந்த விலையில் பெட்ரோல் தேவைப்படுபவர்கள் ஆப்கானிஸ்தான் செல்லலாம் என பாஜக நிர்வாகி ராம் ரத்தன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஆப்கன் தலிபான்கள் வசம் சென்றதால் அங்குள்ள மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்தநிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான ராம் ரத்தன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் பெட்ரோல்- டீசல் விலை குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:

இந்தியாவில் கோவிட் பாதிப்பால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 3வது அலை தாக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது. மீண்டும் கடினமான காலத்தை எதிர்கொள்ள இருக்கிறது. ஆனால் பலர் பெட்ரோல் விலை குறித்து பேசுகிறார்கள்.

பெட்ரோல், டீசல் குறைவான விலையில் தேவைப்பட்டால் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள். அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்குக் கிடைக்கும். அதனால் ஒரு பயனும் இல்லை. அங்கு உயிருக்கே உத்தரவாதம் இல்லை. இந்தியாவில் நீங்கள் முழு பாதுகாப்புடன் இருக்கிறீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x