Published : 19 Aug 2021 03:23 PM
Last Updated : 19 Aug 2021 03:23 PM

சாலை விதிமீறல் குற்றங்கள்; மின்னணு முறையில் கண்காணிப்பு: மத்திய அரசு அறிவுறுத்தல்

வாகனங்களை மின்னணு முறையில் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

மின்னணு கண்காணிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு அமலாக்கம் தொடர்பான விதி குறித்த அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த விதிகள், மின்னணு அமலாக்க கருவிகளை (வேகத்தை கண்காணிக்கும் கேமிரா, சிசிடிவி கேமிரா, வேகத்தை அளவிடும் சாதனம், உடலில் அணியும் கேமிரா, அறிவிப்பு பலகை கேமிரா, நம்பர் பிளேட்டை அடையாளம் காணும் தானியங்கி கருவி (ANPR), எடைபார்க்கும் கருவி, மற்றும் இதர தொழில்நுட்ப சாதனங்கள்) அமைக்கும் விரிவான ஏற்பாடுகளை இந்த விதிமுறைகள் குறிக்கின்றன.

மின்னணு அமலாக்க கருவிகள், அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 132 நகரங்கள் உட்பட ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு அதிகம் உள்ள நகரங்களில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையின் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பொருத்துவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் இந்த மின்னணு கண்காணிப்பு கருவிகளை பொருத்த வேண்டும்.

இடம், தேதி மற்றும் நேரத்திற்கான மின்னணு முத்திரையுடன் கூடிய மின்னணு கண்காணிப்பு சாதனத்தின் காட்சிகள், பின்வரும் குற்றங்களுக்கு நோட்டீஸ் வழங்க பயன்படுத்தப்படலாம்:

(i) பரிந்துரைக்கப்பட்ட வேக வரம்புக்குள் வாகனம் ஓட்டாதது (பிரிவுகள் 112 மற்றும் 183);

(ii) அங்கீகரிக்கப்படாத இடத்தில் வாகனத்தை நிறுத்துதல் (பிரிவு 122);

(iii) ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதது (பிரிவு 128);

(iv) தலைக்கவசம் அணியாதது (பிரிவு 129);

(v) சிவப்பு விளக்கை கடந்து செல்வது, வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவது. சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களை கடந்து செல்வது, போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுவது, அபாயகரமாக வானகம் ஓட்டுவது (பிரிவு 184);

(vi) அனுமதிக்கப்பட்ட எடையைவிட அதிக பொருட்களை ஏற்றிச் செல்வது (194(1)வது பிரிவு)

(vii) சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது (பிரிவு 194B);

(viii) சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது (பிரிவு 66)

விதி 167-ன் கீழ் மின்னணு கண்காணிப்பு கருவிகள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து நோட்டீஸ்களிலும் வாகனத்தின் நம்பர் பிளேட் மற்றும் தெளிவான போட்டோ ஆதாரத்துடன் போக்குவரத்து விதிமுறை மீறல் குற்றங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x