Published : 19 Aug 2021 11:03 AM
Last Updated : 19 Aug 2021 11:03 AM

‘‘நாடாளுமன்றத்தில் அமளி; உங்களால் யாரையும் நிர்பந்திக்க முடியாது’’ வெங்கய்ய நாயுடு பேச்சு

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் ஏற்படும் அமளிகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கவலை தெரிவித்துள்ளார். பொதுவாழ்வில் கண்ணியத்தைக் காப்பாற்றி, இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழுமாறு மக்கள் பிரதிநிதிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, அண்மையில் நாடாளுமன்றத்திலும் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் சட்டப்பேரவைகளிலும் ஏற்படும் நிகழ்வுகளால் மிகுந்த வருத்தம் அடைந்ததாகக் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் ஒரு சில உறுப்பினர்களின் மோசமான நடவடிக்கையால் மிகவும் கவலை அடைந்தேன். சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடையூறு அளிக்கும் செயல்பாடுகளைக் கண்டிக்க தக்கது. நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் விவாதம் மேற்கொள்ளவும், ஆலோசனை நடத்தவும் முடிவுகளை மேற்கொள்வதற்குமான தளமே தவிர இடைஞ்சல்களை ஏற்படுத்துவதற்கான இடமல்ல.

மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கும் அதே வேளையில் மக்களின் தீர்ப்பிற்கும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். எவரையும் உங்களால் நிர்ப்பந்திக்க முடியாது.

சர் எம் விஸ்வேஸ்வரய்யா போன்ற மாபெரும் நபர்களை உத்வேகமாகக் கொண்டு, நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமையான யோசனைகளை இளம் தலைமுறையினர் மேற்கொள்ள வேண்டும்.

தற்சார்பு இந்தியாவை நோக்கி முன்னேறும் வேளையில், வறுமையை ஒழிக்கவும், மண்டல ரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், வலுவான நாட்டை கட்டமைக்கவும் இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

மேலும், இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறப்பாக செயல்படவும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x