Published : 19 Aug 2021 03:11 AM
Last Updated : 19 Aug 2021 03:11 AM

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வை பெண்களும் எழுத அனுமதிக்கலாம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

புதுடெல்லி

தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ) தேர்வை பெண்களும் எழுதலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமி அமைப்பான என்டிஏவில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் பெண்கள் கலந்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது. இந்த தேர்வு ஆண்களுக்கு மட்டுமே என்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இதனால் என்டிஏ-வில் ஆண்கள் மட் டுமே சேர்ந்து படிக்க முடியும். இது பாது காப்பு அமைச்சகத்தின் கொள்கை முடிவு என்று மத்திய அரசு தெரிவித்திருந்து.

பொது நல வழக்கு

இதனிடையே, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு எதிராக குஷ் கால்ரா என்பவர் பொது நல வழக்கை (பிஐஎல்) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தார். என்டிஏ தேர்வில் பெண்களும் கலந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட் டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஆஜரானார்.

வழக்கு விசாரணையின்போது பாது காப்புத்துறை அமைச்சகம் சார்பாக இதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

ராணுவத்தில் சேர்வதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. அதில் ஒரு வழிதான் தேசிய பாதுகாப்பு அகாடமியான என்டிஏ ஆகும். ஆனால், அது மட்டுமே ராணுவத்தில் சேரும் வழி கிடையாது. ராணுவத்தில் சராசரியாக சேர்க்கப்படும் 1,470 அதிகாரிகளில் 670 பேர் இந்திய ராணுவ அகாடமி மற்றும் என்டிஏ மூலம் சேர்க்கப்படுகின்றனர். மற்றவர்கள் ஆபீஸர் பயிற்சி அகாடமி மூலம் சேர்க்கப்படுகின்றனர்.மேலும், எஸ்எஸ்சி தேர்வு முறைகள் மூலம் 453 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்படி ராணுவத்தில் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்ய பல வழிகள் உள்ளன.

மேலும், என்டிஏ தேர்வில் ஆண்களை மட் டும் அனுமதிப்பதால் அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் எதுவும் ராணுவத்தில் இணையும் போது அவர்களுக்கு வழங்கப்படாது. அதனால், இது அடிப்படை உரிமை மீறல் கிடையாது. இவ்வாறு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், மத்திய அரசின் இந்த விளக் கத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது: மத்திய அரசின் இந்த கொள்கை முடிவு பாலின சமத்துவத்துக்கு எதிரானது. இந்திய சட்ட விதி 14, 15, 16 மற்றும் 19-க்கு எதிரானது. பெண்களுக்கான சம உரிமையை இது மறுக் கிறது. அதனால் தேசிய பாதுகாப்பு அகடாமி யின் என்டிஏ நுழைவு தேர்வை பெண்களும் எழுத அனுமதி அளிக்க வேண்டும்.

இது உங்கள் மனநிலைப் பிரச்சினை ஆகும். இதை நீங்கள் (மத்திய அரசு) மாற்றிக் கொள்ளுதல் நலமாக இருக்கும். உத்தரவு பிறப்பிக்குமாறு எங்களைக் கட்டாயப் படுத்தாதீர்கள்.

இந்த கொள்கை முடிவு பாலின பாகு பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமான பார்வை யில் முடிவு எடுக்கும்படி பிரதிவாதிகளுக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம்.

நாங்கள் ஆணைகளை பிறப் பிப்பதை விட, ராணுவம் தானே முன்வந்து ஏதா வது செய்தால் நாங்கள் அதை விரும்புவோம்.

ராணுவத்தில் ஆண் அதிகாரிகள் மிக உயர்ந்த பதவியை அடையும் உரிமை, பெண் அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

பெண் அதிகாரிகள் தங்களது சக ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பணிபுரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. பெண்களின் உடலியல் அம்சங்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உங்களின் மனநிலை கட்டாயம் மாற வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் இது இடைக்கால உத்தரவுதான் என் றும், வழக்கு விசாரணை முழுமையாக முடிந்த பின்னர் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x