Published : 18 Aug 2021 04:05 PM
Last Updated : 18 Aug 2021 04:05 PM

மாயா, ரூபி, பாபி: காபூலில் இருந்து பத்திரமாக திரும்பிய 3 மோப்ப நாய்கள்

புதுடெல்லி

காபூலில் சிக்கி தவித்த பாதுகாப்பு படை வீரர்களுடன் 3 மோப்ப நாய்களும் இன்று பத்திரமாக டெல்லி வந்து சேர்ந்தன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர். பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளும் சிக்கி்க் கொண்டனர். அவர்களை மீட்டு வர ஒவ்வொரு நாடும் விமானத்தை அனுப்பி வருகிறது.

காபூலில் சிக்கியிருந்த இந்திய அதிகாரிகள், தூதரக ஊழியர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்டோரை இந்திய விமானப்படை விமானம் பத்திரமாக மீட்டது.

மேலும் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்தோ- திபெத் படையினரும் இந்தியா அழைத்து வரப்பட்டனர். மொத்தம் 150 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் 99 பேர் இந்தோ- திபெத் படை வீரர்கள். இவர்களை தவிர ஊழியர்கள் மற்ற பணியாளர்களும் அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுடன் பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட 3 மோப்ப நாய்களும் பாதுகாப்பாக இந்தியா அழைத்த வரப்பட்டுள்ளன. மாயா, ரூபி, பாபி என பெயர் கொண்ட இந்த மோப்ப நாய்கள் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்புப் பணியில் வீரர்களுக்கு உதவியாக இருந்து வந்தன.

காபூலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் குஜராத் மாநிலம் ஜாம் நகர் வந்து சேர்ந்த அவர்கள் பின்னர் அங்கிருந்து இன்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x