Last Updated : 15 Aug, 2021 11:17 AM

 

Published : 15 Aug 2021 11:17 AM
Last Updated : 15 Aug 2021 11:17 AM

தீவிரவாதம், ஆக்கிரமிப்புக்கு எதிராக கடின முடிவுகள் எடுக்க இந்தியா தயங்காது: பிரதமர் மோடி எச்சரிக்கை


தீவிரவாதம், எல்லை ஆக்கிரமிப்புக்கு எதிராக பெருந்துணிச்சலுடன் இந்தியா போரிட்டு வருகிறது. எத்தகைய கடினமான முடிவுகளையும் எடுக்க இந்தியா தயங்காது என்று பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் பிரதமர் மோடி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திரன விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி டெல்லிசெங்கோட்டையில் வந்து தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்துபிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக் கூறி பேசியதாவது:

தீவிரவாதிகளுக்கு எதிரான துல்லியத் தாக்குதல், வான்வெளித் தாக்குதல் மூலம் புதிய இந்தியாவுக்கான செய்தியை உலகிற்கு இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியா மாறி வருகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது, இந்தியா எந்த கடினமான முடிவுகளையும் எடுக்கத் தயங்காது எனக் காட்டியுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் சர்வதேச உறவுகளின் இயல்புகள் மாறிவிட்டன. அதேபோல கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குப்பின் புதிய உலகம் உருவாக சாத்தியம் ஏற்பட்டுள்ளது. உலகின் முயற்சிகளை பார்த்த இந்தியா அதை பாராட்டியுள்ளது. அதேநேரம் இந்தியாவை புதிய கண்ணோட்டத்தில் உலகம் பார்க்கிறது. இரு விதமான கண்ணோட்டங்கள் இதில் அடங்கியுள்ளன.

தீவிரவாதம் மற்றும் எல்லைகளை ஆக்கிரமிக்கும் செயல். இந்த இரு சவால்களுக்கு எதிராகவும் இந்தியா துணிச்சலாகப் போராடி, பதிலடி கொடுத்து வருகிறது. (சீனா, பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடவில்லை)
இந்த தேசத்தைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் கரங்களை வலுப்படுத்துவதில் எந்தவிதமான பின்னடைவும் இருக்காது. அதேநேரம் கடினமான முடிவுகளை எடுக்கவும் இந்தியா ஒருபோதும் தயங்காது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x