

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் பெயரை பட்டியலை வெளியிட்டு அந்நாடுகளை அவமானப்படுத்த வேண்டும் என வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூரில் பயங்கரவாத தடுப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர், "பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் பெயர் பட்டியலை வெளியிட்டு அந்நாடுகளை அவமானப்படுத்த வேண்டும். சில நாடுகள் உள்நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பயங்கவராதிகளை ஆதரிக்கின்றனர். அத்தகைய ஆதரவால் பலன் கிடைக்கும் என்ற அவர்களது எண்ணம் வெறும் மாயை" என்றார்.
இக்கருத்தை பாகிஸ்தானை குறிப்பிட்டே ஜெய்சங்கர் சொன்னதாக கூறப்பட்டாலும், அவர் தனது பேச்சில் பாகிஸ்தானை நேரடிய சுட்டிக்காட்டவில்லை.
ஆனால், பதான்கோட் விவகாரத்தில் பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானை வலியுறுத்தும் என ஜெய்சங்கர் கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் கிழக்கு எல்லையை ஒட்டிய நாடுகளில் இருந்து கட்டவிழ்த்துவிடப் படும் பயங்கரவாதம் குறித்து அவர் கூறும்போது, "மியான்மர் நாட்டுடன் நமக்கு சில பிரச்சினைகள் உள்ளது. இந்திய தரப்பு நியாயங்கள் குறித்து மியான்மர் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சில ஆக்கபூர்வ முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
எனவே, இனி வருங்காலங்களில் கிழக்கே எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.