

இந்தியாவில் கடந்த 3 நாட்களாக கரோனா தொற்று குறைந்துவந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 490 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 41 ஆயிரத்து 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 20 லட்சத்து 77 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 87 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 636 பேர் அதிகமாகியுள்ளனர். குணமடைவோர் எண்ணிக்கை 97.34 சதவீதமாக இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 490 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 29 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 48 கோடியே 73 லட்சத்து 70 ஆயிரத்து 196 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. புதன்கிழமை மட்டும் 21 லட்சத்து 24 ஆயிரத்து 953 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை நாட்டில் 52 கோடிக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.