

ஜிபிஎஸ் அடிப்படையிலான கண்காணிப்பு முறையை பற்றி மூன்று மாத காலத்தில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் நிதின் கட்கரி பேசியதாவது:
அனைத்து பங்குதாரர்களின் ஒன்றுபட்ட குழு உணர்வு மற்றும் பங்களிப்பின் காரணமாக கரோனா பெருந்தொற்று காலத்தில் கூட நல்ல பலன்களை அடைய முடிந்தது. ஒரு நாளைக்கு 38 கிலோமீட்டர் எனும் உலக சாதனையை நாம் அடைந்திருந்தாலும், ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் என்பதே இலக்கு.
உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக குறித்த நேரத்தில், வெளிப்படையான முறையில் விரைவாக முடிவெடுக்க வேண்டும்.
ஜிபிஎஸ் அடிப்படையிலான கண்காணிப்பு முறையை பற்றி சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து விளக்கங்கள் வந்திருக்கின்றன. மூன்று மாத காலத்தில் உறுதியான முடிவு எடுக்கப்படும்.
இன்னும் ஒரு வருட காலத்திற்குள் டெல்லியிலிருந்து டேராடூனுக்கு இரண்டு மணி நேரத்திலும் டெல்லியிலிருந்து ஹரித்துவாருக்கு இரண்டு மணி நேரத்திலும் டெல்லியிலிருந்து சண்டிகருக்கு இரண்டு மணி நேரத்திலும் மற்றும் இன்னும் ஆறு மாதங்களில் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு ஒன்றரை மணி நேரத்திலும் செல்ல முடியும். புதிய சாலைகளும் பசுமை போக்குவரத்தும் மிகவும் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.