

மழைகாலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை மட்டுமே நடைபெற வேண்டிய நிலையில் அதற்கு 3 நாட்கள் முன்பாகவே மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியதில் இருந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம் ஆகியவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியிலும், கூச்சல் குழப்பம் விளைவித்து வருகின்றன.
இதனால் இரு அவைகளும் சரியாக நடக்கவில்லை. இதனால் கடந்த 3 வாரங்களில் 78 மணி நேரம் 30 நிமிடங்களில் 60 மணி நேரம் 28 நிமிடங்கள் வீணாகின.
ஒட்டுமொத்தமாக 17 மணி நேரம் 44 நிமிடங்கள் மட்டுமே மாநிலங்களவை செயல்பட்டது. அதில் 4 மணி நேரம் 49 நிமிடங்கள் மட்டுமே மசோதாக்களுக்காகச் செலவிடப்பட்டது. இதனால் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை மட்டுமே நடைபெற வேண்டும். அதற்கு 3 நாட்கள் முன்பாகவே மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:
மக்களவை மொத்தம் 96 மணிநேரம் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் 21 மணிநேரமும் 14 நிமிடமும் மட்டுமே செயல்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 22 சதவீதம் அளவுக்கு மட்டுமே அவை நடந்துள்ளது. மொத்தம் 74 மணிநேரமும் 46 நிமிடங்களும் வீணாகியுள்ளன. 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் ஓபிசி மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே மக்களவை முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் ‘‘எதிர்க்கட்சிகளை கலந்தாலோசிக்காமல் அவை நடவடிக்கையை முடித்துக் கொண்டது கண்டிக்கத்தக்கது. விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனையும் கண்டிக்கிறோம்’’ எனக் கூறியுள்ளார்.