Published : 11 Aug 2021 09:13 AM
Last Updated : 11 Aug 2021 09:13 AM

கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கலந்து செலுத்தும் திட்டம்: டிசிஜிஐ அனுமதி

கோப்புப்படம்

புதுடெல்லி



கரோனாவுக்கு எதிரான கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கலந்து செலுத்தும் பரிசோதனை தி்ட்டத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மருந்துக் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின்(சிடிஎஸ்சிஓ) வல்லுநர்கள் குழுவினர், கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசியை ஒரே நபருக்கு செலுத்திப் பார்க்கும் பரிசோதனை நடத்த தமிழகத்தில் உள்ள வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கடந்த மாதம் 29ம் தேதி அனுமதியளித்தது. இந்த திட்டத்தின் கீழ் 300 தன்னார்வலர்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்படஉள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் தற்போது இரு தடுப்பூசிகள் மக்களுக்கு அதிகமாகச் செலுத்தப்பட்டு வருகின்றன. பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசியாகும்.

தடுப்பூசியைப் பொறுத்தவரை ஒருவருக்கு முதல் டோஸில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தினால், 2-வது டோஸிலும் கோவாக்சின் தடுப்பூசிதான் செலுத்த வேண்டும்.முதல் டோஸில் கோவாக்சினும், 2-வது டோஸில் கோவிஷீல்டும் செலுத்தக்கூடாது என்று ஐசிஎம்ஆர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படிதான் தடுப்பூசி செலுத்த வரும் மக்களுக்கும் அவர்களுக்கு வழங்கப்படும் அட்டை, இணையதளத்தில் பதிவு செய்தல் ஆகியவற்றில் என்ன மாதிரியான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனக் குறி்ப்பிடப்படுகிறது.

இந்நிலையில் இரு வேறு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவதால், நோய்எதிர்ப்புச் சக்தி அதிகரிக்குமா என்று பல்வேறு நாடுகளிலும் ஆய்வுகள்நடந்து வருகின்றன, ஐசிஎம்ஆர்அமைப்பும் ஆய்வு நடத்தியது.

அதாவது முதல் டோஸில் ஒருவர் கோவாக்சின் தடுப்பூசியும், 2-வது டோஸில் கோவிஷீல்ட் தடுப்பூசியும் செலுத்துவதால், ஏதேனும் பக்கவிளைவுகள் வருமா, வேறு ஏதாவது உடலில் உறுப்புகளுக்குபாதிப்பு ஏற்படுமா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வில் இரு தடுப்பூசிகளையும் ஒரே நபருக்குச் செலுத்துவதன் மூலம் உடலில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் கிடைத்தன.

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் ஒருவர் முதல் டோஸில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியுள்ளார். 6 வாரங்களுக்குப்பின் 2-வது டோஸ் செலுத்த வந்தபோது, அவருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

அதன்பின் அந்த நபரை தனியாக அனுமதித்து கண்காணித்தபோது, அவரின் உடலில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்துள்ளது தெரியவந்தது. அதாவது ஒரே தடுப்பூசியை இரு டோஸ்கள் செலுத்தினால் கிடைக்கும் நோய் எதிர்ப்புச்சக்தியைவிட, இரு வேறு தடுப்பூசிகளைச் செலுத்தினால் கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கிறது எனத் தெரியவந்துள்ளது.

இதன்பின்புதான் இரு தடுப்பூசிகளையும் கலந்து ஒருவருக்கு செலுத்துவது குறி்த்து ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x