கரோனா கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் கூடியதால் எதிர்ப்பு- லக்னோவில் ரஜினியின் படப்பிடிப்பு நிறுத்தம்

லக்னோவில் உள்ள இமாம்பாடா.
லக்னோவில் உள்ள இமாம்பாடா.
Updated on
1 min read

உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில் நடிகர் ரஜினிகாந்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. இதில், கரோனா பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்கள் தொடர்பான புகார் எழுந்தது.

‘சிறுத்தை’ படப் புகழ் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம்‘அண்ணாத்த’. தீபாவளிக்குதிரையிடத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் இடம்பெறும் காட்சிகளை படமாக்கும் பணிகள் லக்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஷியா பிரிவு முஸ்லிம்களின் புனிதத் தலமான இமாம்பாடாவில் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற்றன.

அக்காலத்தில் அவத் எனும் பெயரில் அழைக்கப்பட்ட இப்பகுதியை ஆண்ட அஸப் உத் தவுலாஎன்பவரால் இமாம்பாடா 1784-ல்கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தில் பல்வேறுபாலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. தமிழ்திரைப்படத்திற்கானப் படப்பிடிப்புஇங்கு முதன் முறையாக நடைபெறுவதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், ரஜினிகாந்தும் இருப்பார் என்ற எதிர்பார்ப்பில் அவரை காணத் திரண்டனர். ஆனால், அங்கு படத்தின் வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கும் இறுதிக்காட்சிகள் மட்டுமே எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

இதனிடையே மக்கள் கூட்டத்தைப் பார்த்த இமாம்பாடாவினர், ஷியா பிரிவு தலைவர்களுக்கு தகவல் அளித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து ஷியா தலைவர்களில் ஒருவரான மவுலானா சைப் அப்பாஸ், படப்பிடிப்பை தொடர எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து மவுலானா அப்பாஸ் கூறும்போது, “கரோனா பரவல் காலத்தில் இங்கு ரஜினிகாந்தின் படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது ஏன்? இதில், பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தற்போது முஸ்லிம்களின் தியாகத் திருநாளான முஹர்ரம் மாத துக்க நிகழ்வுகளும் இமாம்பாடாவில் இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளன. இச்சூழலில் படப்பிடிப்பிற்கு தடை விதிக்காதது ஏன்?” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து ஷியா பிரிவை சேர்ந்த சிலர் கூட்டமாக கூடி நின்றுபடப்பிடிப்பிற்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். இதனால், ரஜினி படத்தின் படப்பிடிப்பு சில மணி நேரங்களில் நிறுத்தப்பட்டது. அண்ணாத்தே படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளை லக்னோவில் செய்த இக்பால் ஜாப்ரி, அதற்கான அனுமதியை மாநில அரசிடமும், ஷியாமுஸ்லிம் மத்திய வக்ஃபு வாரியத்தினரிடமும் பெற்றிருந்ததாகக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in