Last Updated : 10 Aug, 2021 09:16 PM

 

Published : 10 Aug 2021 09:16 PM
Last Updated : 10 Aug 2021 09:16 PM

127-வது சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகள் ஆதரவு; மக்களவை ஒப்புதல்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (ஓபிசி) கண்டறிந்து பட்டியல் தயாரிக்க மாநில அரசுகளுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் 127-வது சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே அமளிகள் மட்டுமே நடந்த நிலையில் இன்று எதிர்க்கட்சிகளின் எவ்வித எதிர்ப்பு கோஷமும் இல்லாமல், ஓபிசி மசோதா மீது விவாதம் நடைபெற்றது.

பின்னர், நடந்த வாக்கெடுப்பில் 385 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். எந்த ஒரு உறுப்பினரும் மசோதாவை எதிர்க்கவில்லை.
மசோதா சுமுகமாக நிறைவேறும் வகையில் எதிர்க்கட்சியினர் இன்றைய போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதா மீதான விவாதத்தின் போது பதிலளித்துப் பேசிய மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமார், இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினரை (ஓபிசி) கண்டறிந்து பட்டியல் தயாரிக்க மாநில அரசுகளுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கப்படுகிறது என்றார்.

முன்னதாக, மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் அளித்த தீர்ப்பில், சமூக,பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்றும் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்தது. ஓபிசி சமூகத்தினரை அடையாளம் காணும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசு பறித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, ஓபிசி பிரிவினரை அடையாளம் காணும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மீண்டும் வழங்கும் வகையில் மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அமைச்சரவையும் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

அதனைத் தொடர்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பழங்குடியினர் பட்டியலை மாற்றியமைக்கும் அனுமதியை நாடாளுமன்றத்துக்கு வழங்கவும் இம்மசோதா வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x