Published : 08 Aug 2021 03:16 AM
Last Updated : 08 Aug 2021 03:16 AM

வெளிநாடுவாழ் இந்தியரின் ரூ.129 கோடி சொத்து கிடைக்கும் என ஆசை காட்டி பொறியாளரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது: 25 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.13 லட்சம் முடக்கம்

நொய்டா

சமீபத்தில் காலமான வெளிநாடு வாழ் இந்தியரின் ரூ.129 கோடி சொத்து கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி மென்பொறியாளரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக 3 பேரை நொய்டா போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து நொய்டா இணையதள குற்றப் பிரிவு போலீஸார் கூறியதாவது:

நொய்டாவைச் சேர்ந்த தருண் வர்ஷ்னி மென்பொருள் பொறியாளராக உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி இவருக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.

அதில், “கடந்த 2015-ல் லண்டனில் நிகழ்ந்த கார் விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிராஜ் வர்ஷ்னி இறந்துவிட்டார். அவருக்கு ரூ.129 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது. அவருடைய கோத்திரமும் உங்களுடைய கோத்திரமும் ஒரே மாதிரி இருப்பதால், உங்களை (தருண்) வாரிசாக நியமித்துள்ளார்.

எனினும், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வழக்கறிஞர் புரூஸ் எட்டிக்கு 50 சதவீத தொகை சென்றுவிடும்” என கூறப்பட்டிருந்தது.

‘யுனைடெட் கிங்டம் அட்டார்னி’, ‘நெட்டிக்ஸ் பாங்க் லண்டன்’ என்ற முகவரியில் இருந்து தருணுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. சில ஆவண நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு அவற்றில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையெல்லாம் பூர்த்தி செய்த பிறகு, பணத்தை இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவிட்டோம் என மற்றொரு மின்னஞசல் வந்துள்ளது. பின்னர் டேராடூனில் உள்ள வெளிநாட்டு கரன்சி பரிமாற்ற துறை என்ற முகவரியிலிருந்து தருணுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது.

அதில், சுங்க வரி, பதிவு சேவை, வெளிநாட்டு கரன்சி பரிமாற்றம் உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறி சுமார் 25 வங்கிக் கணக்குகளில் பணம் அனுப்புமாறு கேட்டுள்ளனர். இதன்படி, தருண் மொத்தம் ரூ.60 லட்சம் அனுப்பி உள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தருண், நொய்டாவில் உள்ள இணைய குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

இது தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இதன் அடிப்படையில், உ.பி.யின் பரெய்லி மாவட்டத்தைச் சேர்ந்த அகீலுதீன் (30), அனீஸ் அகமது (23) மற்றும் அஸ்லீம் கான் (23) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் பெயரில் 25 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.13 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. அந்த மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x