Last Updated : 14 Feb, 2016 12:22 PM

 

Published : 14 Feb 2016 12:22 PM
Last Updated : 14 Feb 2016 12:22 PM

அப்பாவி மாணவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்காது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) வளா கத்தில், நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி, நாடாளுமன்ற தாக்குதல் வழக் கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை, மாணவர்களில் ஒரு பிரிவினர் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தினர்.

இது தொடர்பாக அடையாளம் தெரியாத மாணவர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்த டெல்லி போலீஸார், ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அணி (ஏஐஎஸ்எப்) உறுப்பினராகவும் கண்ணய்யா குமார் இருந்து வருகிறார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். அப்போது கண்ணய்யா குமாரை விடுவிக்குமாறு வலியுறுத் தினர். இந்நிலையில் ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு நேற்று பதில் அளித்தார். அப்போது அவர், “இந்தப் பிரச்சினையில் அப்பாவிகளை அச்சுறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. என்றாலும் குற்றவாளிகளை தப்பிக்க விடமாட்டோம்” என்றார்.

டி.ராஜா மகளுக்கு மிரட்டல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நேற்று கூறும்போது, ‘‘எனக்கு வெள்ளிக்கிழமை இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் இந்தியில் பேசிய அந்த நபர், பாஜக மற்றும் ஏபிவிபியுடன் எதற்காக சண்டை போடுகிறீர்கள்? உங்கள் மகள் அதே பல்கலைக்கழகத்தில் தான் படித்து வருகிறார். எச்சரிக்கையை மீறினால் அவரை சுட்டுக் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி னார்’’ என்றார். இதேபோல் ஆஸ்தி ரேலியாவில் இருந்தும் தொலை பேசியில் மிரட்டல் வந்ததாகவும், அந்த நபர் தன்னை நிழல் உலக தாதா என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார் எனவும் டி.ராஜா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x