Published : 07 Aug 2021 03:17 AM
Last Updated : 07 Aug 2021 03:17 AM

வேளாண் சட்டத்தை எதிர்த்து 14 எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத், மார்க்சிஸ்டை சேர்ந்த எமல்ராம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பினாய் விஸ்வம், திமுக எம்.பி. சிவா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: கருப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்துகிறோம். இந்த சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை. 3 சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோருகிறோம். அதற்கு பாஜக அரசு தயாராக இல்லை. அனைத்து இந்தியர்களின் செல்போனையும் நரேந்திர மோடி உளவு பார்த்துள்ளார். இவ்வாறு ராகுல் கூறினார்.

இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தை முன்வைத்து, டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ராகுல் காந்தி கூறும்போது, ‘‘பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பெகாசஸ் உளவு மென்பொருளை நமது செல்போன்களில் ஊடுருவ செய்திருக்கிறது. நாட்டு மக்களின் குரலை ஒடுக்கவே பெகாசஸை ஒரு ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x