Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM

சர்க்கரை ஆலைகள் அளிக்க வேண்டிய ரூ.20 ஆயிரம் கோடியை எப்படி திருப்பித் தருவீர்கள்?- மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் அளிக்க வேண்டிய ரூ.20 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை எப்படித் திருப்பித் தருவீர்கள் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

விவசாயிகள் நலன் கருதி போடப்பட்ட பொது நல வழக்கு (பிஐஎல்) மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதி சூர்யகாந்த் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் அளிக்க வேண்டிய ரூ.20 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை எப்படித் திரும்ப அளிக்கப் போகிறீர்கள். இதற்கு எத்தகைய வழியை வகுத்துள்ளீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கும் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தராகன்ட், ஹரியாணா, குஜராத், பிஹார், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களுக்கும், பஜாஜ் ஹிந்துஸ்தான் சுகர், இந்தியன் சர்க்கரை ஆலை சங்கம், கேன் அக்ரோ எனர்ஜி, இந்தியன் சுக்ரோஸ் ஆகிய 4 சங்கங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

முன்னதாக, ராஜு அண்ணா ஷெட்டி மற்றும் நான்கு பேர் தாக்கல் செய்த மனு மீது மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஆஜராகி வாதிட்டார். கடந்த பிப்ரவரி 12-ம்தேதி மாநிலங்களவையில் மத்தியஉணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் அளித்த பதிலில் ஜனவரி 1, 2021 நிலவரப்படி சர்க்கரை ஆலைகள் ரூ.18,084கோடி நிலுவை தொகை அளிக்கவேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.20 ஆயிரம் கோடியாகும். உ.பி.யில் உள்ள சர்க்கரை ஆலைகள் ரூ.7,555 கோடியும், கர்நாடக ஆலைகள் ரூ.3,585 கோடியும், மகாராஷ்டிர ஆலைகள் ரூ.2,030 கோடியும் அளிக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x