Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM
சத்தீஸ்கரில் மனந்திருந்திய முன்னாள்நக்சல்கள், ஒரு காலத்தில் தாங்கள் இடித்த பள்ளியை மீண்டும் கட்டியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டம், பான்சி மாசபாரா கிராமத்தில் நக்சல்களால் 6 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடம் மீண்டும் கட்டப்பட்டுள்ளது. 27 மாணவர்களுடன் இப்பள்ளி கடந்த திங்கட்கிழமை செயல்படத் தொடங்கியது. தண்டேவாடா மாவட்ட ஆட்சியர் தீபக் சோனி,மாணவர்களுக்கு முதல் வகுப்பு எடுத்தார். இதில் சிறப்புக்குரிய விஷயம் என்னவென்றால், யாரால் பள்ளி இடிக்கப்பட்டதோ அவர்களால் மீண்டும் கட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நக்சல் களாக அப்பள்ளியை இடித்தவர்கள், அண்மையில் சரணடைந்து புதியவாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இவர்கள் அப்பள்ளியை மீண்டும் கட்டி,அதற்கு புதிய வண்ணம் தீட்டி புத்துயிர் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தீபக்சோனி கூறும்போது, “இந்த நக்சல்கள் கடந்த ஜூலை மாதம் சரணடைந்தபோது, என்ன செய்ய விரும்புகிறீர் கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் பள்ளிக் கட்டிடத்தை மீண்டும் கட்டுவதன் மூலம் அதிலிருந்து வரும் கூலித் தொகையில் தங்கள் வாழ்க்கையை தொடங்க விரும்புவதாகக் கூறினர். இதையடுத்து பள்ளி கட்டுமானப் பணிக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டது. வெகு விரைவாக இப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சரணடைந்த நக்சல்கள் தற்போது பள்ளிக்கு ஒரு சாலையையும் புதிய அங்கன்வாடி மையம் ஒன்றையும் கட்டி வருகின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT