Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM
மாநிலங்களவையில் முக்கிய அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும்போது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அவைக்கு வராதது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆட்சேபம் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் நேற்று 6 அமைச்சர்கள் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்ய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வி. முரளிதரனை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அழைத்தார். அப்போது, பிரச்சினை எழுப்பிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ‘‘ஏதாவது காரணங்களுக்காக அமைச்சர்கள் அவைக்கு வரமுடியாத நிலையில், அவர்களுக்காக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், தினமும் அவையில் மற்ற அமைச்சர்களுக்காக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரே அறிக்கை தாக்கல் செய்கிறார். மாநிலங்களவையை அந்த அமைச்சர்கள் மதிக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.
அதற்கு மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதில் அளிக்கையில், ‘‘புதன்கிழமையும் இதே பிரச்சினை எழுப்பப்பட்டது. அதற்கு அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ‘கரோனா காலத்தை மனதில் கொண்டு மற்ற அமைச்சர்களுக்கு பதிலாக அவர்கள் சார்பில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அறிக்கைகள் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT