Published : 04 Aug 2021 10:58 PM
Last Updated : 04 Aug 2021 10:58 PM

ஜனநாயகத்துக்கு மரியாதை கொடுங்கள்: துணைநிலை ஆளுநரை சாடிய முதல்வர் கேஜ்ரிவால்

"ஜனநாயகத்துக்கு மரியாதை கொடுங்கள் சார்.." என டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பாய்ஜாலை கண்டித்துள்ளார் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.

கரோனா நிலவரம் குறித்து அரசு அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் தனிப்பட்ட முறையில் அலுவல்கூட்டம் நடத்தியமைக்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது தனிப்பட்ட முறையில் ஆதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது அரசியல் சாசனத்துக்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் எதிரானது.

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். மக்கள்தான் அமைச்சர்களைத் தேர்வு செய்துள்ளனர். உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் அதனை மக்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.

அதற்கு மாறாக அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தாதீர்கள். நாம் ஜனநாயகத்தை மதித்து நடப்போமே" என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லி அரசின் அதிகாரங்களை குறைத்து, துணை நிலை ஆளுநரின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மக்களவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த மசோதாவின்படி, டெல்லி அரசு என்பதன் பிரதிநிதி டெல்லியின் துணைநிலை ஆளுநர்தான் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கரோனா நிலவரம் குறித்து அரசு அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் தனிப்பட்ட முறையில் அலுவல்கூட்டம் நடத்தியிருப்பது டெல்லி அரசியலில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x