Last Updated : 04 Aug, 2021 04:53 PM

 

Published : 04 Aug 2021 04:53 PM
Last Updated : 04 Aug 2021 04:53 PM

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஏன் பலாத்கார சம்பவங்கள் பற்றிப் பேச மறுக்கிறார்?- ராகுல் காந்திக்கு பாஜக கேள்வி

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா | கோப்புப் படம்.

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் ஏன் பலாத்கார சம்பவங்கள் குறித்து ராகுல் காந்தி பேச மறுக்கிறார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பழைய நங்கல் பகுதியில் 9 வயதுச் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அவர்களுக்கு நீதி கிடைக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் கட்சி செய்யும், துணையாக நான் இருப்பேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் சிறுமியின் தாயுடன் பேசிக்கொண்டிருந்த புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டார்.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''டெல்லியில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட தலித் சிறுமியின் குடும்பத்தாரை இன்று ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து, ஆறுதல் கூறியது அரசியல் உள்நோக்கம் கொண்டது, தேர்ந்தெடுப்பு வாதம். காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் தலித் சிறுமிகள் பாதிக்கப்படும்போது ராகுல் காந்தி ஏன் ட்வீட் ஏதும் செய்யவி்ல்லை. அங்கு நடக்கும் அட்டூழியங்கள், அத்துமீறல் குறித்து ராகுல் காந்தி ஏன் மவுனமாக இருக்கிறார்?

அதுமட்டுமல்லாமல் போக்சோ சட்டத்தின் விதிகளையும் ராகுல் காந்தி மீறியுள்ளார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை அடையாளம் காட்டக்கூடாது என்று விதி இருக்கும்போது, அந்தச் சிறுமியின் தாயின் புகைப்படத்தை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அவர் மீது போக்சோ விதிமீறலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உங்களுக்கு அரசியல் ஆதாயம் ஏதும் கிடைத்தால் அங்கு மட்டும் கண்ணைத் திறப்பீர்கள், மற்ற இடங்களில் கண்களை மூடிக் கொள்வீர்கள். இது வினோதமாக இருக்கிறது''.

இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x