மேற்கு வங்கத்தில் வெள்ளம்: 14 பேர் உயிரிழப்பு; 2.5 லட்சம் பேர் வெளியேற்றம்

மேற்கு வங்கத்தில் வெள்ளம்: 14 பேர் உயிரிழப்பு; 2.5 லட்சம் பேர் வெளியேற்றம்
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு 14 பேர் உயிரிழந்தனர். 2.5 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையை தொடர்ந்து தாமோதர் பள்ளத்தாக்கு திட்ட அணைகள் திறக்கப்பட்டன. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, புர்பா பர்தமான், பாஸ்சிம் பர்தமான், பாஸ்சிம் மேதினிபூர், ஹூக்ளி, ஹவுரா, தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 6 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2.5 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சுவர் இடிந்து விழுந்தது, மின்சாரம் பாய்ந்தது போன்ற சம்பவங்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்தனர்.

ஹூக்ளி மாவட்டத்தில் ராணுவம் மற்றும் விமானப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பலர் மீட்கப்பட்டு வருவதுடன், ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் வினியோகிக்கப்படுவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுமாறு அந்தந்தப் பகுதி அமைச்சர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in