2-வது அலை இன்னும் ஓயவில்லை; கவனத்துடன் இருக்க வேண்டும்: மத்திய அரசு எச்சரிக்கை 

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை, மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது.

அதேநேரத்தில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. சில மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:

இந்தியாவில் ஜூன் 1-ம் தேதி 279 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாதிப்பு பதிவானது. தற்போது அந்த எண்ணிக்கை 57 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

எனினும் சில மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் 2-வது அலை பரவல் இன்னும் ஓயவில்லை. இதனால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.

கேரளாவில் 10 மாவட்டங்கள் உள்பட மொத்தம் 18 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மாவட்டங்கள் அடங்கியுள்ளன.

இந்த 18 மாவட்டங்களில் 47.5 சதவீதம் பாதிப்புகள் பதிவாகின்றன. நாடு முழுவதும் 44 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in