Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM

மருத்துவ மாணவியை சுட்டுக்கொன்ற முன்னாள் காதலன்: பிஹாரில் துப்பாக்கி வாங்கி பயிற்சி எடுத்தது விசாரணையில் அம்பலம்

கேரளாவில் பல் மருத்துவ மாணவியை அவரது முன்னாள் காதலன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இதற்காக பிஹாரில் துப்பாக்கி வாங்கி பயிற்சி எடுத்தது தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மானசா (24), எர்ணாகுளம், மாவட்டம் கோதமங்கலத்தில் உள்ள பல்மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.இந்நிலையில், மானசா தனது தோழிகளுடன் வசித்துவந்த வீட்டில் அவரும் மற்றொரு இளைஞரும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த எர்ணாகுளம் போலீஸார் அங்கு விரைந்து சென்றனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில் மானசாவோடு இறந்து கிடந்த நபர் கண்ணூரைச் சேர்ந்த ராகில் என தெரியவந்தது. இன்ஸ்டாகிராம் மூலம், மானசாவும் ராகிலும் கடந்த ஓர் ஆண்டாகவே பழகி வந்துள்ளனர். வீட்டு வடிவமைப்பாளராக பணி செய்யும் ராகிலின் நடவடிக்கைகள் பிடிக்காமல் மானசா ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அதன் பின்பு ராகில் அடிக்கடி மானசாவுக்கு தொந்தரவு கொடுத்துவர மானசாவின் பெற்றோர் இதுதொடர்பாக போலீஸில் புகார்கொடுத்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ராகிலை அழைத்து இனி மானசாவுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டேன் என எழுதி வாங்கியதோடு எச்சரித்தும் அனுப்பினர். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ராகில் மானசா தங்கியிருந்த வீட்டுக்கு அருகிலேயே அறை எடுத்து தங்கி அவரை ரகசியமாக கண்காணிக்கத் தொடங்கினார். வீட்டில் சகதோழிகள் இல்லாமல் மானசா மட்டும் தனிமையில் இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த ராகில், மானசாவை சுட்டுக்கொன்றதோடு, தானும் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால் இந்த கொலையை அவர் அரங்கேற்றிய விதம் அனைவரையும் நடுங்க வைத்துள்ளது.

மானசாவின் குடும்பத்தை சந்தித்த பின்பு கேரள அமைச்சர் கோவிந்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த கொலை வட இந்திய பாணியில் நடந்துள்ளது. கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை பிஹாரில் வாங்கி உள்ளார் ராகில். இதுதொடர்பாக விசாரிக்க காவல் துறையின் ஒரு குழு பிஹார் சென்றுள்ளது’’ என்றார்

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஜூலை 12-ம் தேதி பிஹாருக்குச் சென்ற ராகில், 22-ம் தேதிதான் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். துப்பாக்கியை இயக்க அங்கேயே பயிற்சியும் எடுத்துள்ளார். தன்னைவிட்டு பிரிந்த மானசாவைகொலை செய்யும் நோக்கத்துடன்கண்ணூரில் இருந்து கோதமங்கலத்திற்கு சென்றுள்ளார்.

மானசா தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் இருந்த விடுதி ஒன்றில் தங்கி உள்ளார் ராகில். அந்த அறையில் இருந்தே மானசா, கல்லூரிக்கு சென்று வரும் நேரம், அறையில் தனிமையில் இருக்கும் நேரம் ஆகியவற்றை திரைப்படப் பாணியில் கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மானசா 30-ம்தேதி தனியாக இருந்தபோது, வீட்டுக்குள் நுழைந்த ராகில் துப்பாகியால் மானசாவை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக் கிறான். இதற்கு முன்பு வேறு ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த காதல் தோல்வியில் முடிந்துள்ளது. 2-வது காதலும் முறியவே இந்த முடிவை எடுத்துள்ளார்.

முதல்கட்ட விசாரணையில் ராகில் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை 4 லட்ச ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பெண்கள் சமூகவலைதள காதலை நம்பக்கூடாது என்பதற்கு மானசாவின் வழக்கே உதாரணம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x