Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் பணிகள் நடைபெறவில்லை: மத்திய இணை அமைச்சர் தகவல்

தூத்துக்குடி எம்.பி.யும் திமுகமக்களவைக் குழு துணை தலைவருமான கனிமொழி மக்களவையில் எழுப்பிய கேள்வியில், “தமிழ்நாட்டில் வேளாண் மண்டலபாதுகாப்பு சட்டம் 2020 நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் உறிஞ்சும் பணிகளுக்கான ஏலத்தை தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, ரத்து செய்ய அரசு பரிசீலிக்கிறதா?” என்று கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ரமேஷ் தெகிலி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுத்தல் பணிக்காக 3-வது சுற்று ஏலத்தை இந்திய அரசு அறிவித்தது. இந்தியா முழுவதும் 75 இடங்களில் 13,204 சதுர கிலோ மீட்டரில் 35 ஒப்பந்தங்களை் கோரி இந்த ஏலம் அறிவிக்கப்பட்டது.

இவற்றில் 2 பெட்ரோலிய கிணறுகள் உள்ளிட்ட குத்தகையை உள்ளடக்கிய ஒப்பந்தம் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக் கோட்டை வடத்தெரு ஆகிய பகுதிகளில் போடப்பட்டுள்ளது. இந்த 2 பெட்ரோலிய கிணறு குத்தகைகளும் 2007 மற்றும் 2012-ல் வழங்கப்பட்டவை. எண்ணெய் வயல்கள் முறைப்படுத்துதல் விரிவாக்கல் சட்டம்-1948 , பெட்ரோலிய இயற்கை எரிவாயு விதிகள்-1959 ஆகியவற்றின் கீழ் இவை வழங்கப்பட்டன. இப்போது தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுத்தல் பணியும் நடைபெறவில்லை. இவ்வாறு அமைச் சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x