Published : 02 Aug 2021 07:17 PM
Last Updated : 02 Aug 2021 07:17 PM

டெல்டா பிளஸ் கரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் கோவாக்சின்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

புதுடெல்லி

டெல்டா பிளஸ் கரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தற்போது 47 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி டெல்டா போன்ற மரபணு உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவித்தது.

கரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் செயல்பாடு குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் ஆய்வு செய்தது. அறிகுறிகளுடன் கூடிய கரோனா பாதிப்பின் தீவிரத்தை 77.8 சதவீதம் தடுக்கிறது என தெரியவந்தது. டெல்டா வகை கரோனா வைரஸுக்கு எதிராக 65.2 சதவீதம் வரை தடுக்கிறது என்றும் தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் டெல்டா பிளஸ் கரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இதனால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த ஆய்வும் தீவிரமடைந்து வருகிறது. இந்த வகை டெல்டா பிளஸ் வைரஸுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுவதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x