Published : 24 Feb 2016 01:00 PM
Last Updated : 24 Feb 2016 01:00 PM
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தை எழுப்பி பகுஜன் சமாஜ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் சிலர் பதவி விலக வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
ரோஹித் வெமுலா சர்ச்சை தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதிக்கப்படவிருந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, "தலித் மாணவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறார்கள். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் நீக்கப்பட வேண்டும், வெமுலா தற்கொலையில் தொடர்புள்ள மத்திய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்.
விசாரணைக் குழுவில் தலித் உறுப்பினர் இருக்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். இவற்றின் மீதான நடவடிக்கை என்னவென்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, "ரோஹித் வெமுலா சர்ச்சை குறித்து அரசு உடனடியாக பேசத் தயாராக இருக்கிறது. குழந்தையை அரசியல் ஆயுதமாக யார் பயன்படுத்துகிறார்கள் என்று விவாதிக்கலாம்" என்றார்.
ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியினர் அரசு விளக்கமளித்தால் மட்டுமே விவாதத்தை நடத்த அனுமதிப்போம் என கூச்சல் எழுப்பினர். தலித் விரோத ஆட்சியை அனுமதிக்கமாட்டோம் என கோஷங்கள் எழுப்பினர். இதனால், அவை அடுத்தடுத்து 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் கூடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT