Published : 09 Feb 2016 09:08 PM
Last Updated : 09 Feb 2016 09:08 PM
இந்திய வரலாற்று சின்னங்களின் பராமரிப்பை தனியாரிடம் அளிக்க ஆலோசனை செய்து வருவதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய தொல்பொருள் ஆய்வகத்தில் உள்ள அலுவலர் பற்றாக்குறையை சமாளிக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட்டு வருவது இந்திய தொல்பொருள் ஆய்வகம்(ஏ.எஸ்.ஐ). இது, ஆக்ராவின் தாஜ்மகால், டெல்லியின் செங்கோட்டை உட்பட நாட்டிலுள்ள அனைத்து வரலாற்றுச் சின்னங்களை புதுப்பிப்பதுடன், பாதுகாத்து, பராமரித்தும் வருகிறது. இங்கு பணியில் இருக்கும் பாதுகாப்பு படைகளையும் ஏ.எஸ்.ஐயால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. எனினும், ஏ.எஸ்.ஐயிடம் உள்ள அலுவலர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதை அதிகரிக்க அரசிற்கு ஆர்வம் இல்லை என்பதால் நாட்டின் சில வரலாற்றுச் சின்னங்களை தனியாரின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக தனியாரிடம் ஒப்படைக்க மத்திய கலாச்சாரத்துறை அவ்வப்போது யோசிப்பது வழக்கமாக உள்ளது.
ஏனெனில், முறையான பராமரிப்பு இன்றி இந்திய வரலாற்றுச் சின்னங்களில் பல அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஏ.எஸ்.ஐயிடம் இருக்கும் நிதிப்பற்றாக்குறையும் ஒரு முக்கியக் காரணம் ஆகும். இவற்றை தனியாரிடம் ஒப்படைக்க ஒவ்வொரு முறையும் வரலாற்றாளர்கள் உட்படப் பல்வேறு தரப்பினரால் கடும் எதிர்ப்புகள் கிளம்புவதும் வழக்கமாக உள்ளது. ஆனால், இந்தமுறை மத்திய கலாச்சாரத்துறையின் சார்பில் வரலாற்றுச்சின்னங்களை தனியாரிடம் ஒப்படைக்க தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இதற்கான யோசனை, சில துறையினர் மற்றும் சுற்றுலா தலப் பகுதிகளில் இருந்து வந்துள்ளது. டெல்லியின் செங்கோட்டை, குதுப்மினார் ஆகியவற்றின் உட்புற பராமரிப்பை தனியார் அளிக்க யோசித்து வருகிறோம். இவை சுத்தப்படுத்துதல், கழிவறைகளை சுத்தமாக்குதல், பாதுகாப்பு, நூலகம், பசுமை பராமரிப்பு, சிற்றுண்டி போன்ற ஆகும், இதன் மீதான கருத்துக்களை பிரபல தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற விரும்புகிறோம்.’ எனத் தெரிவித்தார்.
இந்த தகவலை அமைச்சர், சர்வதேச சுற்றுலாவாசிகள் பயன் பெற வேண்டி நேற்று டெல்லியில் மத்திய கலாச்சாரத்துறை சார்பில் 24 மணி நேர தொலைபேசி சுற்றுலா தகவலகம் துவக்கி வைத்த போது தெரிவித்தார்.. இலவச சேவையான இது, 1800111363 எனும் எண்ணில் செயல்படும். இந்தி, ஆங்கிலம், அரபி, பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், கொரியா, சீனா, போர்ச்சுகீஸ், ரஷ்யா மற்றும் ஸ்பானிஷ் ஆகிய 11 மொழிகளில் செயல்படுவதை அத்துறையின் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா துவக்கி வைத்தார். அப்போது அவர் வரலாற்று சின்னங்களை பராமரிப்புக்காக தனியாரிடம் அளிப்பது பற்றி தெரிவித்தார்.
சர்வதேச சுற்றுலாவாசிகளுக்காக ‘இன்கிரிடிபுள் இந்தியா இந்தியா மொபைல் ஆப்’ எனும் பெயரில் ஒரு செயலியும் அறிமுகப்படுத்த இருப்பதாக டெல்லியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் மகேஷ் சர்மா அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT