

கோப்புப்படம்
விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் மேலும் 7 நக்சலைட்கள் நேற்று என்கவுன்ட்டரில் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், மாரேடுபல்லி வனப்பகுதியில் நக்சலைட் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் ஆந்திர ஆயுதப்படை போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர், நக்சலைட்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நக்சலைட் கமாண்டர் ஹிட்மா உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று காலை 6 மணிக்கு நக்சலைட்களுடன் மீண்டும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இதில் ஜோகாராவ் என்கிற டெக் சங்கர், சீதா என்கிற ஜோதி, சுரேஷ், கணேஷ், வாசு, அனிதா, ஷம்மி ஆகிய 7 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இதனால் இரு நாட்களில் என்கவுன்ட்டர்களில் இறந்த நக்சலைட்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் ஆந்திராவில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்த 50 நக்சலைட்களை போலீஸார் கைது செய்து நேற்று விஜயவாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.