Last Updated : 01 Aug, 2021 02:17 PM

 

Published : 01 Aug 2021 02:17 PM
Last Updated : 01 Aug 2021 02:17 PM

பெகாசஸ் விவகாரம்: நீதிவிசாரணை கோரி தாக்கல் செய்த மனு: உச்ச நீதிமன்றத்தில் வரும் 5ம்தேதி விசாரணை

கோப்புப்படம்

புதுடெல்லி


இஸ்ரேலின் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு செயலி மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி பத்திரிகைாயளர் என்.ராம் உள்ளி்ட்ட பலர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட அமர்வில் வரும் 5-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசி குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ஆகியோர் பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரத்தை கடந்த வாரத்திலிருந்து நாடாளுமன்றத்தில் எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசி குமார் தரப்பில் பெகாசஸ் விவகாரத்தில் நீதிவிசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு அடுத்தவாரம் விசாரி்க்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. பத்திரிகையாளர் என் ராம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகுகிறார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது “ ஏராளமான விளைவுகளை உண்டாக்கக் கூடிய பெகாசஸ் விவகாரம் தொடர்பான மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுங்கள். இந்திய அரசியலமைப்புச்சட்டம் வழங்கிய பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை ஒடுக்கும் வகையில் விசாரணை அமைப்புகளுக்கு உளவுபார்க்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அல்லது அதன் விசாரணை அமைப்புகள், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு செயலியைப் பயன்படுத்தி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உளவு பார்க்க லைசன்ஸ் பெற்றிருக்கிறதா என்பதை மத்தியஅரசு வெளிப்படுத்த வேண்டும்.

உலகளவில் பல்வேறு புகழ்பெற்ற நாளேடுகள், இதழ்கள் வெளியிட்ட தகவலில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள்மூலம், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல இந்தியர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

ஆதலால், நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். செல்போன்களை ஒட்டுக்கேட்பது என்பது கிரிமினல் குற்றமாகும். தகவல்தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66, 66பி, 66இ, 66எப் ஆகியவற்றின் கீழ் செல்போன்களை ஒட்டுக்கேட்பது குற்றமாகும்”
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x