Last Updated : 01 Aug, 2021 10:13 AM

 

Published : 01 Aug 2021 10:13 AM
Last Updated : 01 Aug 2021 10:13 AM

மக்களின் வரிப்பணம் ரூ.133 கோடி வீண்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் 89 மணிநேரம் விரயம்


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகள் செய்துவரும் அமளியால் 107 மணிநேரத்தில் 89 மணிநேரம் விரயமானது. வரி செலுத்துவோரின் பணம் ரூ.133 கோடி வீணானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது, 20 அமர்வுகள் வரை நடத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முதல்நாள் பெகாசஸ்ஒட்டுக் கேட்பு விவகாரம் எழுந்தது.

இந்த விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைக்கக் கோரியும், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் விவசாயிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு, பெட்ரோல்,டீசல் விலை உயர்வு, தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பிஎதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபடுவதால் பெரும்பாலான மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை, விவாதிக்க முடியவில்லை, கேள்விகளுக்கு அமைச்சர்களால் பதில்தர முடியவில்லை.

மத்திய அரசின் தகவலின்படி, மக்களவை கடந்த 2 வாரங்களில் 54 மணிநேரத்தில் வெறும் 7மணிநேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. மாநிலங்களவை 53 வேலைநேரத்தில் வெறும் 11 மணிநேரம் மட்டுமே ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றம் 107 வேலைநேரத்தில் 18 மணிநேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. 89 மணிநேரம் வீணாகிப்போனது, ஏறக்குறைய வரிசெலுத்துவோரின் பணம் ரூ.133 கோடிக்கும் அதிகமாக விரயமாகியுள்ளது.

அதிலும் குறிப்பாக மாநிலங்களவையின் முதல் இரு வாரங்களில் பணிநேரமான 50மணிநேரத்தில் 40 மணிநேரம் வீணாகியது. முதல் வாரத்தில் மாநிலங்களவையின் செயல்பாடு 32.20 சதவீதம் இருந்த நிலையில் 2-வது வாரத்தில் 13.70 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

50மணிநேரத்தில் 39மணிநேரம் 52 நிமிடங்கள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் வீணாகிப்போனது. பட்டியலிடப்பட்ட நேரத்தில் ஒருமணிநேரம் 12நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டுள்ளது. இந்த இரு வாரங்களில் 98 நிமிடங்கள் மட்டுமே கேள்வி நேரம் நடந்துள்ளது,84 நிமிடங்களில் 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன அதில் 7 எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரம் ஒருநிமிடம் மட்டுமே நடந்துள்ளது. சிறப்பு கவனஈர்பப்ு 4 நிமிடங்கள் மட்டுமே நடந்துள்ளது.

மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் கரோனா தொடர்பான விவகாரம் 4மணிநேரம் 37நிமிடங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன, இது தவிர பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தகவல்தொழில்நுட்ப அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x