

கார் நிக்கோபாரில் சிக்கித் தவித்த மீன்பிடி கப்பலை இந்தோனேசிாவில் கரோனா நிவாரணப் பொருட்களை ஒப்படைத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் பத்திரமாக மீட்டது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள கார்நிகோபாரில் சிக்கியிருந்த மீன்பிடி கப்பலான சலேத் மாதா -II-ஐ, ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் மீட்டது.
ஜூலை 29ஆம் தேதி அதிகாலை போர்ட் பிளேயரைச் சேர்ந்த இந்த மீன்பிடி கப்பலில் ஏற்பட்ட பழுது காரணமாக அந்தக் கப்பல் இலக்கின்றி நகர்ந்துகொண்டிருந்தது. தென்மேற்குப் பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட சூறைக்காற்று மற்றும் மழையினால் கப்பலை கயிற்றால் இழுத்துச் செல்லும் முயற்சி மிகவும் சவாலாக இருந்தது.
இந்த நிலையில், இந்தோனேசியாவின் ஜகார்தாவில் கோவிட்-19 நிவாரண உதவிப் பொருட்களை வழங்கிவிட்டு ஐஎன்எஸ் ஐராவத் திரும்புகையில், அந்த வழியாகச் சென்றது. அதிகபட்ச வேகத்தில் மீன்பிடி கப்பலைச் சென்றடைந்து, அதனை அருகிலுள்ள துறைமுகத்திற்கு ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் இழுத்துச் சென்றது.