Last Updated : 31 Jul, 2021 02:42 PM

 

Published : 31 Jul 2021 02:42 PM
Last Updated : 31 Jul 2021 02:42 PM

மாட்டிறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள்; எதையும் சாப்பிட உரிமை இருக்கிறது: பாஜக அமைச்சர் பேச்சு

மேகாலயா மாநிலக் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சன்போர் சுலாய் | படம் உதவி: ட்விட்டர்.

ஷில்லாங்

கோழிக்கறி, ஆட்டிறைச்சி, மீனைவிட மாட்டிறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள் என்று மேகாலயா மாநில பாஜக அமைச்சர் சன்போர் சுலாய் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவது தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவருகின்றன. இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதிலும் சர்ச்சை நிலவும்போது அமைச்சர் சன்போர் சுலாய் பேசியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயாவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. முதல்வராக கான்ராட் சங்மா உள்ளார். அங்கு கடந்த வாரம் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றவர் சன்போர் சுலாய்.

இந்நிலையில் அவர் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது கூறியதாவது:

''இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் மக்கள் தாங்கள் விரும்பியதை உண்பதற்கு உரிமை இருக்கிறது. மீன், கோழிக்கறி, ஆட்டிறைச்சி சாப்பிடுவதைவிட மாட்டிறைச்சியைச் சாப்பிடுங்கள் என்று மக்களை நான் ஊக்கப்படுத்துவேன். மாட்டிறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள் என ஊக்கப்படுத்துவதன் மூலம் பசுவதைக்கு பாஜக தடை விதிக்கும் என்ற கருத்து மாற்றப்படும்.

அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம் பேசி, மேகாலயாவுக்கு மாடுகளை அனுப்பி வைப்பதால், புதிய சட்டம் எந்தவிதத்திலும் மீறப்படாது என்று பேசுவேன். மேகாலயா, அசாம் மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினை இருக்கிறது. எங்களின் எல்லை எந்தவிதத்திலும் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாப்போம்.

அசாம் மக்கள் எங்கள் எல்லையில் உள்ள மக்களைத் தொந்தரவு செய்தால், தேநீர் குடிக்கவும், பேசவும் மட்டும் நேரம் வராது, நாங்கள் பதிலடி கொடுக்கவும், அந்த இடத்திலேயே எதிர்வினையாற்றவும் நேரம் வரும்.

இப்படிப் பேசுவதால் நான் வன்முறைக்கு ஆதரவானவன் இல்லை. நம்முடைய மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

எதிரிகள் நம்முடைய வீட்டைத் தாக்கினால், உங்களுடைய மனைவி, மகள், குழந்தைகளைத் தாக்கினால், சுய பாதுகாப்புக்கு நீங்களும் அவர்களைத் தாக்கலாம். அப்படித்தான் நாங்கள் எங்கள் எல்லையில் அசாம் போலீஸாருடன் மோதினோம். எதிரிகள் உங்கள் வீட்டுக்கு வந்து கொள்ளையடிக்கவோ, திருடவோ வந்தால், உங்கள் வீட்டை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அது சட்டரீதியாகவோ அல்லது சட்டத்துக்குப் புறம்பாகவோ பாதுகாக்க வேண்டும்.

இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீண்டகாலமாக இருக்கிறது, இதை விரைவில் தீர்க்க வேண்டும். பல கட்சிகள் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துவிடுவோம் என வாக்குறுதியளித்துவிட்டு யாரும் அதைச் செய்யவில்லை. 50 ஆண்டுகளாகத் தீர்வு கிடைக்கவில்லை''.

இவ்வாறு சன்போர் சுலாய் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x