Published : 31 Jul 2021 01:39 PM
Last Updated : 31 Jul 2021 01:39 PM

92.8% ரேஷன் அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைப்பு

நாடு முழுவதும் 92.8 சதவீத ரேஷன் அட்டைகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக, மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.

அவர் மாநிலங்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 21.91 (92.8%) கோடி ரேசன் அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியை முடித்து விட்டன. இதில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 70.94 கோடி (90 சதவீதம்) பயனாளிகள் உள்ளனர். நாட்டில் உள்ள சுமார் 4.98 லட்சம் நியாய விலை கடைகளில் (92.7 சதவீதம்), கடந்த 23ம் தேதி வரை, மின்னணு-விற்பனை இயந்திரங்கள் உள்ளன.

பொது விநியோக திட்டத்தின் கீழ், நாட்டில் 5.38 லட்சம் நியாய விலை கடைகள் செயல்பாட்டில் உள்ளன. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக பிஹாரில் அதிக அளவிலான நியாய விலை கடைகள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 80,493, மகாராஷ்டிராவில் 52,532, பிஹாரில் 47,032, தமிழகத்தில் 34,776 நியாய விலைக் கடைகள் உள்ளன.

2020-21 காரீப் சந்தை பருவத்தில், 869.29 லட்சம் மெட்ரிக் டன் நெல்லும், 2021-22 ராபி சந்தை பருவத்தில் 433.32 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கொள்முதல் ஆகும்.

பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், குஜராத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 2021-22 ராபி சந்தை பருவத்தில் கோதுமை அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப், பிஹார், குஜராத், தெலங்கானா, ஜார்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2020-21 காரீப் சந்தை பருவத்தில் அதிகளவிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x